கீழ்வேங்கை நாட்டில் இடம்பெற்றுள்ள ஊர்கள்:-
01 .பரிதியப்பர் கோவில்
02 .உப்பாங்கரை
03 .களிதீர்த்தால் குடிக்காடு
04 .கீழ உளூர்
05 .மேல உளூர்
06 .சூரக்கோட்டை
07 .சின்ன பருத்திக்கோட்டை
08 .பெரிய பருத்திக்கோட்டை
09 .தும்பதிக்கோட்டை
10 .சின்ன பொன்னாப்பூர்
11 .பெரிய பொன்னாப்பூர்
12 .தலையாமங்கலம்
13 .தாந்தோணி
14 .குலமங்கலம்
15 .கொடமாங்கொல்லை
16.மன்றாயர் தெரு
17 .மன்றாயன்குடிகாடு
அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் சுவாமி திருக்கோவில்
மூலவர் | : | பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர் | ||
உற்சவர் | : | - | ||
அம்மன்/தாயார் | : | மங்களாம்பிகை,மங்களாம்பிகை | ||
தல விருட்சம் | : | அரசு | ||
தீர்த்தம் | : | சூரிய புஷ்கரிணி, சந்திர புஷ்கரணி, கருங்குழி தீர்த்தம் | ||
ஆகமம்/பூஜை | : | - | ||
பழமை | : | 1000-2000 வருடங்களுக்கு முன் | ||
புராண பெயர் | : | பரிதிநியமம், திருப்பரிதி நியமம் | ||
ஊர் | : | பரிதியப்பர்கோவில்-614 904. | ||
மாவட்டம் | : | தஞ்சாவூர் | ||
மாநிலம் | : | தமிழ்நாடு |
பதிகம் | : | திருஞானசம்பந்தர் - 1 |
நாடு | : | கீழ்வேங்கை |
| |||||||||||||
தல வரலாறு: சிவபெருமானுக்கு அழைப்பு அனுப்பாமல், அவரை நிந்தனை செய்து தட்சன் நடத்திய யாகத்தில் சூரியன் கலந்து கொண்டதால் அவனுக்கு தோஷம் ஏற்பட்டது. தனது தோஷத்தைப் போக்கிக் கொள்ள சூரியன் 16 இடங்களில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டான்.அதில் சங்கரன்கோவில், தலைஞாயிறு, சூரியனார் கோவில், திருமங்கலக்குடி, வடஇந்தியாவில் உள்ள கோனார்க் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இத்தலத்தில் தான் சூரியனுக்கு ஏற்பட்ட தோஷம் விலகியது.பரிதி என்று அழைக்கப்படும் சூரியன் கொடிய நோயினால் பாதிக்கப்படுகிறான். நோயிலிருந்து தன்னை காக்க சிவனிடம் வேண்ட, இத்தலம் வந்து தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்கம் அமைத்து தன்னை வழிபட்டால் நோய் விலகும் என்கிறார் சிவன். சூரியனும் அதன்படி செய்ய, அவனது நோய் நீங்கியது. இதனால் இங்குள்ள இறைவன் பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்திற்கு இன்னொரு வரலாறும் உண்டு.ராமபிரானின் முன்னோர்களான சூரிய குளத்தில் தோன்றிய சிபி சக்கரவர்த்தி, வயதான காலத்தில் மகனிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சிவத்தலங்களை தரிசிக்க புறப்பட்டான். (இவன் புறாவிற்காக தன் சதையை கொடுத்தவன்). அப்போது இந்த இடத்திற்கு வந்ததும் அசதியின் காரணமாக இளைப்பாறினான். குதிரைச்சேவகன் குதிரைக்கு புல் சேகரித்து கொண்டிருந்தான். புல்லுக்காக பூமியை தோண்டியபோது, அவன் கையிலிருந்த ஆயுதம் சூரியனால் அமைக்கப்பட்டு, பூமிக்குள் இருந்த லிங்கத்தின் மீது பட்டது. உடனே லிங்கத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. இதனை அறிந்த மன்னன் அந்த இடத்தை தோண்டுமாறு உத்தரவிட்டான். உள்ளிருந்து சூரிய லிங்கம் வெளிப்பட்டது. அதற்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபட்டான். இதை நினைவு படுத்தும் வகையில் இன்றும் கூட சிவலிங்கத்தில் ரத்த வடு உள்ளது. லிங்கம் இந்த இடத்திற்கு எப்படி வந்தது என்பதை ஒரு முனிவர் மூலம் அறிந்து, அந்த இடத்தில் கோயில் கட்டினான். சூரியனால் அமைக்கப்பட்ட லிங்கம் சூரிய குல மன்னனால் வெளி உலகிற்கு தெரிய வந்தது. மண்ணில் புதையுண்டு இருந்த இந்த சிவலிங்கம் ஸ்ரீ ராமருடைய முன்னோர்களான சூர்யா குளத்தில் தோன்றிய சிபிச் சக்கரவர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்டு அவரால் ஆலயம் கட்டப்பட்டது. சூரியனுக்கு பரிதி என்ற பெயரும் உண்டு. பரிதி வழிபட்டதால் இத்தல இறைவன் பரிதியப்பர் என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்த லிங்கத்திற்கு சூரியபகவான் ஆண்டுதோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறான். ஆலயத்திற்கு இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. சூரிய தீர்த்தம் கோயிலின் முன்பும் சந்திரதீர்த்தம் பின்பும் உள்ளது. தலமரம் அரசமரம். தலச் சிறப்பு: மூலவர் பரிதியப்பர் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தியின் பின்னால் சூரியன் பெரிய வடிவுடன் நின்ற நிலையில் சிவதரிசனம் செய்வதைக் காணலாம். இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாதது ஆகும்.
அம்பாள் மங்களாம்பிகை மாங்கல்ய பாக்கியம் தருபவள் என்று போற்றப்படுகிறாள். எத்தகைய பிதுர் தோஷத்திற்கும் இத்தலம் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. மேலும் இத்தலம் பஞ்ச பாஸ்கர தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மார்கண்டேயர் இத்தலத்தில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம். ஆயுள்விருத்தி தலம்: மார்க்கண்டேயன் இங்கு அருவ வடிவில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம். நோயினால் நீண்ட நாள் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள். 60,70,80 வயதானார்கள் இத்தலத்தில் "சஷ்டியப்தபூர்த்தி' திருமணம் செய்வதால் அவர்களது ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். பிரமசர்மா என்பவனும் அவரது மனைவி சுசீலையும் தாங்கள் செய்த பாவத்தினால் பருந்தும் கிளியுமாக மாற சாபம் பெறுகின்றனர். இவர்கள் தாங்கள் செய்த பாவத்தை மன்னிக்க இத்தலம் வந்து பிரார்த்தனை செய்து சாபவிமோசனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. |
திருவிழா:
சித்திரை மாதம்-அட்சய திரிதியை, மாசி மாதம்- ரத சப்தமி,
பங்குனி மாதம்- சூரிய பூஜை 10 நாள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பொது தகவல்:
மிக பழைமையான கோயில் - கிழக்கு நோக்கியுள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம். இரண்டாம் கோபுரம் மூன்று நிலை. முதல் கோபுரம் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம், வசந்த மண்டபத்திற்கு பக்கத்தில் அம்பாள் கோயில் தெற்கு பார்த்து உள்ளது. இரண்டாங் கோபுர வாயிலைக் கடந்து பிரகாரத்தில் வந்தால் விநயாகர், முருகன், கஜலட்சுமி, சந்நிதிகளைத் தரிசிக்கலாம். நடராசசபை உள்ளது. அருகில் பைரவர், சூரியன், சந்திரன் நவக்கிரகங்கள் உள்ளன. இங்குள்ள முருகப் பெருமான் சிறந்த வரப்பிரசாத மூர்த்தியாக வழிபடப் படடுகிறார்.
துவாரபாலகர்களையும் விநாயகரையும் தொழுது உட்சென்றால் சுயம்ப மூர்த்தமாகத் திகழ்கின்ற மூலவரைத் தரிசிக்கலாம். மூலவருக்கு எதரில் நந்தி, பலிபீடம் - அடுத்துச் சூரியன் வழிபடும் நிலையில் உருவம் உள்ளது. சண்டேசுவரர் சந்நிதியில் மூன்று திருமேனிகள் உள்ளன. கோயிலுக்கு தென்புறம் பிடாரி கோயில் உள்ளது. கோயிலருகில் இடும்பன் கோயிலும் உள்ளது.
பிரார்த்தனை:
இத்தலத்தில் சூரியனுக்கு தோஷம் நிவர்த்தி ஆனதால், இது பிதுர் தோஷ பரிகார தலமாக விளங்குகிறது.
ஜாதகரீதியாக எந்த கிரகத்தினாலும் பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம்.
மேலும் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், சூரிய திசை நடப்பவர்கள், சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தவர்கள், சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்கள், தமிழ் மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள் ஆகியோர் தமிழ் மாத வளர்பிறையில் வரும் முதல் ஞாயிற்று கிழமையில் சிவனையும் சூரியனையும் வழிபட்டால் அவர்களுக்குள்ள தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 101வது தலம்.
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
1-3/3912
விண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழப் பெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசிப் பேணார் பலிதேர்ந்து கண்கொண்ட சாயலோ டேர்கவர்ந்த கள்வர்க் கிடம்போலும் பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பருதிந் நியமமே.
2-3/3913
அரவொலி வில்லொலி அம்பினொலி அடங்கார் புரமூன்றும் நிரவவல் லார்நிமிர் புன்சடைமேல் நிரம்பா மதிசூடி இரவில் புகுந்தென் னெழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும் பரவவல் லார்வினை பாழ்படுக்கும் பருதிந் நியமமே.
3-3/3914
வாண்முக வார்குழல் வாள்நெடுங்கண் வளைத்தோள் மாதஞ்ச நீண்முக மாகிய பைங்களிற்றின் உரிமேல் நிகழ்வித்து நாண்முகங் காட்டி நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும் பாண்முக வண்டினம் பாடியாடும் பருதிந் நியமமே.
4-3/3915
வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி விரிபுன் சடைதாழத் துஞ்சிருள் மாலையும் நண்பகலுந் துணையார் பலிதேர்ந்து அஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும் பஞ்சுரம் பாடிவண் டியாழ்முரலும் பருதிந் நியமமே.
5-3/3916
நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண் மதிசூடித் தார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்து தலையார் பலிதேர்வார் ஏர்புல்கு சாயல் எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும் பார்புல்கு தொல்புக ழால்விளங்கும் பருதிந் நியமமே.
6-3/3917
வெங்கடுங் காட்டகத் தாடல்பேணி விரிபுன் சடைதாழத் திங்கள் திருமுடி மேல்விளங்கத் திசையார் பலிதேர்வார் சங்கொடு சாயல் எழில்கவர்ந்த சைவர்க் கிடம்போலும் பைங்கொடி முல்லை படர்புறவிற் பருதிந் நியமமே.
7-3/3918
பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப் பெரிய மழுவேந்தி மறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார் இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும் பறையொலி சங்கொலி யால்விளங்கும் பருதிந் நியமமே.
8-3/3919
ஆசடை வானவர் தானவரோ டடியார் அமர்ந்தேத்த மாசடை யாதவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார் காசடை மேகலை சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும் பாசடைத் தாமரை வைகுபொய்கைப் பருதிந் நியமமே.
9-3/3920
நாடினர் காண்கிலர் நான்முகனுந் திருமால் நயந்தேத்தக் கூடலர் ஆடலர் ஆகிநாளுங் குழகர் பலிதேர்வார் ஏடலர் சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும் பாடலர் ஆடல ராய்வணங்கும் பருதிந் நியமமே.
10-3/3921
கல்வளர் ஆடையர் கையிலுண்ணுங் கழுக்கள் இழுக்கான சொல்வள மாக நினைக்கவேண்டா சுடுநீ றதுவாடி நல்வளை சோர நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும் பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப் பருதிந் நியமமே.
11-3/3922
பையர வம்விரி காந்தள்விம்மு பருதிந் நியமத்துத் தையலொர் பாகம் அமர்ந்தவனைத் தமிழ்ஞான சம்பந்தன் பொய்யிலி மாலை புனைந்தபத்தும் பரவிப் புகழ்ந்தேத்த ஐயுற வில்லை பிறப்பறுத்தல் அவலம் அடையாவே.
No comments:
Post a Comment